Tuesday 20 September 2016

சதுரங்கக்காய் தன் கதைகூறல்

- எழுதியது வாகீசன் -

பாண்டிய நாட்டிற்காக சேர சோழ அரசுகளைத் தோற்கடித்த சதுரங்கக் காய் நானே. மூன்று தலைமுறைப் பாண்டியர்களுக்கு நான் பேருதவி புரிந்தேன். என்னால் பாண்டிய மன்னர்கள் சதுரங்க விளையாட்டில் எப்போதும் வெற்றி அடைந்தார்கள். அந்நாளில் நான் எப்படி சிறப்புடன் இருந்தேன் என்பதை நீங்களும் கேளுங்கள்.

மாறன் என்னும் பாண்டிய இளவரசன் கி மு 11ம் நூற்றாண்டு தை மாதம் திங்கட்கிழமை அரசனான போது அவனுக்கு அன்பளிப்பாக நான் கொடுக்கப்பட்டேன். சதுரங்கக் காய்களின் அரசக்காய் நானே. நான் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தேன். என் முடியும் உடலும் விலைமதிக்க முடியாத கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நான் மிக மிக அழகாக இருந்ததால் அரசர் என்னை அவரின் முடியில் வைத்திருந்தார்.

பாண்டியமாறனுக்கு சதுரங்கம் விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கு யுத்தம் செய்வது பிடிக்கவில்லை. இருந்தும் மாமன்னனாக வேண்டும் எனும் ஆசை இருந்தது. அதை அறிந்த மந்திரி “அரசே! நீங்கள் சதுரங்கம் விளையாடியே எல்லா நாடுகளையும் வென்று வாகை சூடலாம்” என்று சொன்னான். அதனைக் கேட்டு நான் மட்டுமல்ல அரசனும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தான்.


அதன்பின் பாண்டிய மாறன் சேர, சோழ அரசர்களுடன் சதுரங்கமாடி அவர்களை வென்று மாமன்னனாக விளங்கினான். அவன் என்னைத் தன் உயிர் போல் பாதுகாத்தான். அவனின் பேரனான நெடுமாறன் காலத்திலும் பாண்டிய நாடு பேரரசாகவே விளங்கியது. என் புகழும் உலகெலாம் பரவியது. கிரேக்கத் தூதுவனாகப் பாண்டிய நாட்டுக்கு வந்த அரிஸ் என்பவன் என்னைக் கபடமாக கிரேக்கத்துக்குக் கொணர்ந்து விட்டான்.

எனது வரலாறு அறியாத பிரிட்டிசார் என்னைக் கிரேக்கர்கள் சொத்து எனக்கூறி அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். மூவாயிர ஆண்டுகளுக்கு மேலாகியும் என் இளமைக் காலத்தை என்னால் மறக்க முடியவில்லை. சங்கத்தமிழ் கேட்ட என் காதுகளில் எத்தனை வேற்றுமொழிகளைக் கேட்டுவிட்டேன். அந்தத் தமிழ் தந்த இனிமையும் இளமையும் எது தரும்?

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனைப் பயன் படுத்தலாம்]

No comments:

Post a Comment