Thursday 21 July 2016

குறள் அமுது - (119)


குறள்:
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு”                     - (குறள்: 106)

பொருள்:
நெஞ்சில் வஞ்சனை அற்றவர் நட்பை மறக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தில் துணையாக நின்றவர் நட்பைக் கைவிடவும் கூடாது.

விளக்கம்:
யார் யாருடைய நட்பை நாம் மறவாதும் துறவாதும் இருக்க வேண்டும் என்பதை கூறும் இந்தத் திருக்குறள் ‘செய்நன்றி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. ஒருவர் எமக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தலே செய்நன்றி அறிதலாகும். இன்னொரு வகையில சொல்வதானால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையை அறிந்து வைத்திருத்தல் என்றும் சொல்லலாம்.

மனதைச் சுத்தமாய் வைத்திருப்போர்கள் ஒருவரின் வாழ்வை எப்படிக் கெடுப்பது, பிறர் வருந்தி உழைத்த பொருளை வஞ்சனையால் தமதாக்கிக் கொள்வது, களவெடுப்பது, பொய்பேசுவது, உண்டவீட்டிற்கே இரண்டகம் செய்வது, தமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது, காரணமின்றி சண்டை பிடிப்பது போன்ற செயல்களச் செய்யமாட்டார்கள். அத்தகையோர் நெஞ்சம் குற்றம்[மாசு] அற்றதாய் அன்பும் பரிவும் பாசமும் எந்நேரமும் நிறைந்திருக்கும் என்பதால் அவர்களை மாசற்றோர் என்கிறார். மனமாசு அற்றோர் நட்பை என்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஒன்றைக் கண்டறிய துப்புக் கிடைத்தது என்றதும் வலிமையான, துணையான, உதவக்கூடிய ஆதாரம் கிடைத்தது என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? ஆதலால் எமக்கு வலிமை சேர்ப்போரை, துணையாய் நிற்போரை, உதவி செய்வோரை துப்பாயர் என்பர். எமக்கு ஒரு துன்பம் வந்த நேரத்தில் துணையாய், உதவியாய் இருந்தவர்களின் நட்பை எப்போதும் விட்டுவிடாது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.


உறவைவிட நட்பின் வலிமை மிகவும் இறுக்கமானது. மனித வாழ்வு தரும் படிப்பினையில் ஒன்று உறவை மறந்தாலும் நட்பை மறக்கமுடியாது என்பதே. நாம் பல ஆண்டுகள் பேசாது பாழகாது இருந்தாலும் நட்பின் தன்மையை நண்பர்கள் உணர்வர். அந்த நட்பிலும் உள்ளத்தில் கலங்கம் இல்லாதவர் நட்பை மறவாமலும் எமது துன்பத்தில் உதவியோரின் நட்பை கைகழுவி விடாமலும் நாம் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் எம்மையெல்லம் பார்த்து ‘மறவற்க!’ என விளித்துச் சொல்வதில் இருந்து இத்திருக்குறளின் மேன்மையை நாம் புரிந்து கொள்வது நன்று.

No comments:

Post a Comment