Saturday 16 August 2014

இறைவன் ஆராய்ந்த அன்புவாழ்க்கை

அது தமிழர் வாழ்வு நெறி
எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[ஈழகேசரி - 1940]


தமிழர்களின் அன்பு வாழ்வினைப் பற்றி சங்க இலக்கியங்கள் விமர்சிக்கின்றன. அவை தமிழ் என்ன சொல்லியுளது, “தமிழ் நுதலிற்றோ” எனின் “தமிழ் நுதலிற்று” என்பர். நுதலிற்றோ - சொல்லுதல், நுதலிற்று - சொன்னது. தமிழ் என்றால் அன்பு என்று பொருள். எனவே சங்க இலக்கியம் அன்பை ஆராய்ந்தது.

அன்புசிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்புசிவம் என்பது யாரும் அறிகிளார்
அன்புசிவம் எனப தாரும் அறிந்தபின்
 அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே”

தமிழை ஆராய்ந்து ஆராய்ந்து கொண்டு போக, அன்புதான் சிவமாக - சிவந்தான் அன்பாக அமர்ந்துள்ளதை அறிந்து கொண்டார்கள் என்க. அன்பு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

சங்க இலக்கியங்களிலே பேசப்படுவன உலகியல். உலகம் வாழ்த்த வாழவேண்டிய சீரிய நெறிகளே. சங்க இலக்கியங்கள் போற்றப்படக் காரணமும் உலகியல் நெறிகளில் அதியுயர்ந்த - அன்பு வாழ்வினை - இன்புற இல்லற உலகியலில் பொருத்திக் கூறுவதனாலேயே. 

சங்க இலக்கியங்கள் பகரும் அன்புக் காதற்காட்சியைப் பாருங்கள். அழகிய இளநங்கை தன் வீட்டினுள் நடந்தாள். அவள் நடப்பதைக் கண்ட அவளுடைய அருமைத் தந்தை மகளுடைய பாதங்கள் நிலத்திலே தோய்ந்து நடக்கப் பொறுக்கமாட்டாது, 
“எவனடி குறுமகள் இயங்குதி என்னும்”
‘என் அழகு மகளே! ஏன் நடக்கிறாய்! பூமியில் பாதம் படாமல் - நடந்து திரியாமல் மெத்தையில் இரு!’ என உறுமுகிறான்.

அவளோ,
யாக்கைக்கு உயிரியைந்தன்ன துவரா நட்பில்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”
என்கிறாள்.

உயிரம் - உயிரினை உடையோம் என்று பொருள். உயிர(ம்)மே - ‘ஏ’காரம் ஈற்றசை. உயிரோமாயுள்ளோம் என்றவாறு. ஒரு நாள் அவள் உடன் போய்விட்டாள் - காதலித்தவனுடன் போய்விட்டாள். 

தோழி சிற்றன்னை ஓடித்தேடுகிறாள்.
"என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி காட்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும!
என வழியில் வருவோரை உசாவுகிறாள் - வினாவுகிறாள்.

அந்தணர் சொல்கிறார்
“காணோமல்லேம் கண்டனம் கடத்திடை
ஆணெழில் விடலையொடு அருஞ்சுரம் முன்னிய
மாணெழில் கற்பின் தாயிர் நீர் போறிர்…….
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாட்கவைதாமென் செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே….
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலைப் பிரியா ஆறுமற்றதுவே”
அவர்கள் இருவரும் ஒன்றாய்ப் போனது சரி. அது தர்மம் தலைப்பிரியாத தமிழர் வாழ்வு நெறி. நீர் இனிக் கவலையின்றிப் போகலாம் என்கிறார் அந்தணர்.

அவர்களுக்கு திருமணமும் முடிந்தது. அவளின் காதற்கணவன் பொருள் தேடிச் செல்கின்றான். அவன் சென்றதும் அவள் வீட்டில் இருந்து அழுதாளாம். அவள் மனதால் அழவில்லை. கண்ணால் அருவியாக நீர் பாய அழுதவள். தன்னைத் தானே கேட்கிறாள். இல்லை தனது கண்ணை முன்னிலைப் படுத்திக் கேட்கிறாள்.

“கண் தாம் கலுழ்வது எவன் கொலோ
தண்டா நோய் தான்காட்ட யான்கண்டது”

அவள் தனது கண்ணைக் கேட்டது வள்ளுவதேவரின் காதுக்குக் கேட்டு அவர் பாடிவைத்துள்ளார். அவளது கண்தான் காதலனை அவளுக்குக் காட்டியது. கண்ணே! நீ ஏன் அழுகிறாய்? நீ தானே அவரைக் காட்டித் தந்தாய். நீ காட்ட நான் கண்டேனே ஒழிய, நான் காட்ட நீ காணவில்லையே!  காதலரைக் காட்டித் தந்த நீ அழுவானேன் என்று கேட்டாளாம். அப்படித் தன் கண்ணைக் கேட்டு அழுதவள் இரண்டொரு நாளில் மனந்தேறிவிட்டாள்.

கணவன் பொருள் தேடி பாலை நிலத்தைக் கடந்து போகின்றானே. நெருப்பாக ஆதவன் கொழுத்துகிறானே. அவன் போகும் வழியில் பருக்கைக் கற்கள் தழல் போலச் சிவந்து தீயைக் கனல்கின்றனவே. அந்தக் கற்கள் பூ மொட்டுகள் போல இருக்கவேண்டும். பாலை நில வெப்பம் நீக்கி வானம் மேகந்தவழ வேண்டும். நிலம் குளிர வேண்டும். தன் காதலன், முட்டின்றி அவ்வழியேக வேண்டும் என மழைதரும் செல்வனாகிய சூரிய தேவனை, அன்பு இன்னதென உணர்ந்த - அன்பு மயமாய் வாழப்பழகிய தலைவி வேண்டுகிறாள்.

பருக்கைக் கற்கள் மலர் மொட்டுக்கள் - இல்லை தேன் நிரம்பிய மொட்டுக்கள் போலக் குழைந்து குளிர்ந்துவிடுகின்றன. முகில்கள் சூழ்ந்து மழைத் துளிகள் சொட்டுகின்றன. நிலம் துவண்டு கசிந்து பாதம் பதியக்கூடிய மெதுமையடைகின்றன. அவளது அன்பு ஆதவனிலும் பூமியிலும் வானத்திலும் தெய்வீகமாய்ப் பரவுகிறது. அதனை அநுபவிக்கும் தலைவன் துன்பம் நீங்கி அன்பில் மிதந்து கொண்டு போய்ப் பொருள் தேடி மீள்கின்றான். 

இது சங்கச் சான்றோர் வடித்த அன்புச் செய்யுள். இதனை கால - நேர - தூரங்கடந்த இறைவன் - சங்கப் புலவனாக இருந்து ஆராய்ந்தார். இதனை மணிவாசகர்

“சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் 
என் சிந்தையுள்ளும்
உறைவான், உயர் மதில்க் கூடலின் ஆய்ந்த 
ஓண் தீந்தமிழின் துறை” 
என்கின்றார். 

தமிழ் மக்களின் வாழ்வு நெறியை - அன்பு வாழ்க்கையை இறைவன் ஆராய்ந்து சொக்கி மெலிந்து போனாராம்.
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment