Saturday 23 August 2014

குறள் அமுது - (94)

குறள்:
“சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப் பாடுஊன்றும் களிறு”                                   - 597

பொருள்:
உடம்பில் அம்புபட்டு வருந்தும் யானை அதனைத் தாங்கி நிற்றல் போல அறிஞர் அழிவு வந்த போதும் தம் செயலில் தளரமாட்டார்.

விளக்கம்:
யாரை ஊக்கமுடையவர் எனச்சொல்லலாம்? ஊக்கமுடையவர் அழிவு வந்தால் தளர்ந்து போவரா? போன்ற கேள்விகளுக்கு இத்திருக்குறள் விடை தருகிறது. அத்துடன் இக்குறள் புதையம்பு என்றோர் அழகிய தமிழ்ச்சொல்லைத் சொல்கிறது. புதைத்தல் என்பது = ஒன்றை மறைத்தலாகும். சேற்றால் ஆன குழியுள் வீழ்பவை அமிழ்ந்து மறைந்து போவதால் அதற்கு புதைகுழி என்று பெயர். அம்புகள் தைத்து அவற்றுள் புதைதல் புதையம்பு எனப்படும். 

காட்டில் வாழும் யானைக்கூட்டத்தை ஒரு யானை தலைமை தாங்கி வழிநடத்தும். அந்த யானை எத்தகைய இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று யானைக்கூட்டத்தைக் காக்கும். தலைமைதாங்கும் யானை வேடர் எய்யும் அம்புகள் தைத்து தைத்து புதையம்பினுள் புதைந்தாலும் அம்புகள் தைத்த வேதனையையும் பொருட்படுத்தாது, தனது உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காது தான் தலைமைதாங்கிய யானைக் கூட்டத்தை வேடர்களிடம் இருந்து காப்பதற்கு துணிந்து நின்று போராடும்.

அதுபோல் அறிஞர்கள் [உரவோர்] தாம் செய்ய நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை என்ன இடர்வந்தாலும் தளர்வு அடையாது அதனைச் செய்துமுடிப்பர். அத்தகையோரை நாம் ஊக்கமுடையவர் என்று சொல்லலாம். ஊக்கம் இல்லாதோர் தாம் செய்யத்தொடங்கிய வேலையை, படிப்பை, செயலை இடைநடுவே செய்யாது விடுவர். ஆனால் ஊக்கம் உடையோர் தமக்கு - தம்முயிருக்கு அழிவு வந்தாலும் எடுத்த வேலையைத் தொடர்ந்து செய்து முடித்து வெற்றி காண்பர்.

No comments:

Post a Comment