Saturday, 29 November 2025
வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே!
வெள்ளத்துள் நாம் ஆடலாகுமோ
கள்ளத்துள் கரந்தாடக் கற்றனையோ
கள்ளத்துள் நாமாடிக் களிப்பதென்னே
பள்ளத்துள் பாய்ந்தாடும் பரமனே படு
பள்ளத்துள் நாமாடக் கூடுமோ
உள்ளத்துள் உவந்தாடும் பாதனே உன்
உள்ளத்துள் நாமாடல் ஒன்னுமோ
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
கள்ளத்துள் - வஞ்சனையாக
கரந்தாடக் - மறைந்தாடக்
கள்ளத்துள் நாமாடி - பொய்யாக நாமாடி
களிப்பதென்னே - மகிழ்வது என்னவோ?
பள்ளத்துள் -தாழ்ந்த நிலத்தில்
படு பள்ளம் - மிகமிக ஆழமான குழியில்
நாமாடக் கூடுமோ - நாம் ஆட முடியுமா?
உள்ளத்துள் - மனத்துள்
உவந்து - மனம் மிக மகிழ்ந்து
பாதனே - பாதத்தையுடையவனே
உன் உள்ளத்துள் - உனது நெஞ்சத்துள்
ஒன்னுமோ - உறுதியாய் நிகழுமோ?
குறிப்பு
காட்டாற்று வெள்ளமாய் கல்லும் மலையும் குதித்து படு பாதாளத்தில் பாய்ந்து வீழ்ந்தோடி கட்டிடங்களைத் தகர்த்து உயிர்களைக் கொன்று குவித்த இயற்கையின் சீற்றத்தை பார்த்த தாக்கத்தால் எழுந்த பாடல்.
Saturday, 8 November 2025
எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி - அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னை ‘தமிழ்’, ‘தமிழ் அக்கா’ என்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த தங்கையின் உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயினை நாகபூணிசக்கு எம் குடும்பத்து ‘நிதி’ உடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!
இனிதே,
தமிழரசி.
Subscribe to:
Comments (Atom)

