Saturday 15 June 2024

கொஞ்சுதமிழ் சொல்லு கிஞ்சுகவாய் திறந்து!

ஞாலமெலாம் நீயாகி ஞானியருட் பொருளாகி

ஞெகிழும் அடியர் ஞெமர நினைவோர்

காலமெலாம் கைதொழ காட்சியருட் கந்தா

காதலால் கண்ணீர் கசிந்து வடியும்

கோலமெலாம் கண்டாலும் கொஞ்சம் இரங்காயோ

கொஞ்சுதமிழ் சொல்லு கிஞ்சுகவாய் திறந்து

சீலமெலாம் எமதாக்கி சீருடன் வாழ்வதற்கே

செந்தண்மை ஈந்து செம்மைசெய் செவ்வேளே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்

ஞாலம் - உலகம்

ஞானி - ஞானநிலை அடைந்தோர்

ஞெகிழும் - உருகும்

ஞெமர - நிறைய

கொஞ்சுதமிழ் - மழலைத்தமிழ்

கிஞ்சுகவாய் - சிவந்தவாய்

சீலம் - நல்லொழுக்கம்

சீருடன் - பெருந்தன்மையுடன்

செந்தண்மை - இரக்கமுள்ள தன்மை[கருணை]

செம்மைசெய் - தூய்மைசெய்

செவ்வேள் - முருகன்

No comments:

Post a Comment