Wednesday 31 October 2018

குறள் அமுது - (137)


குறள்:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு                                  - 841

பொருள்:
அறிவு இல்லாமையே இல்லாமைகளில் பெரிய இல்லாமையாகும். மற்றைய பொருட்கள் இல்லையெனினும் உலகம் அதனை இல்லாமையாகக் கொள்ளாது.

விளக்கம்:
இத்திருக்குறள் புல்லறிவாண்மை எனும் அதிகாரத்தில் முதலாவது குறளாக உள்ளது. அறிவு அற்றோர் தம்மை அறிவுள்ளவராகக் கருதும் செருக்குபுல்லறிவாண்மைஎன்று கூறப்படும். ஆராய்ந்து அறியும் அறிவற்றோரை புல்லறிவு அல்லது சிற்றறிவு உடையோர் எனவும் கூறுவர்.

சிலர் புல்லறிவையும் பேதமையையும் ஒன்றெனக் கருதுகின்றனர். இரண்டும் அறிவின்மை ஆதலால் அப்படிக் கருதுகின்றனர். திருவள்ளுவர் பேதமையை எண்பத்து நான்காவது அதிகாரத்திலும் புல்லறிவாண்மையை எண்பத்து ஐந்தாவது அதிகாரத்திலும் பிரித்துக் கூறியுள்ளார். இவை அறிவின்மையின் வெவ்வேறு தன்மைகளாகும். தனக்கு நன்மை தருவது எது என்பதை அறிய முடியாதிருக்கும் தன்மை பேதமையாகும்.

பேதையர் புல்லறிவு உடையோராய் இருப்பர். ஆனால் புல்லறிவு உடையோர் யாவரும் பேதையர்களாக இருப்பர் என்று கூறமுடியாது. நாலடியாரில் ஔவையார் 
கற்றதும் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்                                  
                                               - (நாலடியார்: 314)
என அறிவற்ற பேதையரின் புல்லறிவைக் கூறியுள்ளார். பேதை கற்றறியாது ஆசிரியர் மனப்பாடம் செய்யவைத்ததால் தெரிந்து வைத்திருந்த ஒரேயொரு சூத்திரத்தை நன்கு படித்தோர் இடையே வெட்கப்பாடாமல் சொல்லி தனது அறிவின்மையைக் காட்டிக் கொள்வானாம். அறிவின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இதனை ஔவையார் கூறியுள்ளார்.

திருவள்ளுவரோ ஔவையாருக்கு ஒருபடி மேலே சென்று அறிவு இன்மையே இல்லாமைகளில் பெரிய இல்லாமை என்கிறார். ஏனெனில் பணம் இல்லை, பொருள் இல்லை, பிள்ளை இல்லை, வீடு இல்லை, காணியில்லை, ஊரில்லை, நாடில்லை என்று சொல்கின்ற எல்லா இல்லாமைகளையும் பண்பட்ட உலகம் இல்லாமையாகக் கருதுவதில்லை. எனவே அறிவின்மையே மிகப்பெரிய இல்லாமையாகும். ஆதலால் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. அருமையான தகவல்
    பாராட்டுகள்

    ReplyDelete