Wednesday, 28 January 2026

விரைந்துணர்வில் கலந்தான்


கந்தனவன் புந்தியுளே காட்சிதர வந்தான்
            கணப்பொழுதே ஆனாலும் கவின் முகத்தின்
                        காந்தமது பாய காய்ந்த மரமானேன்

காந்தனவன் கண்ணிரண்டும் கருணையினைக் காட்ட
            காலைவிரி கதிரொளியில் இருள்கலைதல் போல
                        காந்தங் கலைந்தெனது சிந்தை நிறைவாக

சேந்தனவன் சாந்தமுகம் சந்ததமும் சிந்தும்
            சிறுநகையில் சிக்குண்டே சித்தந் தடுமாறி
                        செய்தவினை போக்கென்று செப்பிடவே மறந்தேன்

விந்தனவன் விந்தமலர் குருவிந்தமென மின்ன
            விந்தையிது என்னயென வியந்துநான் பார்க்க
                        விரைகழலின் ஒலியெனவே விரைந்துணர்வில் கலந்தான்.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கந்தன் - முருகன்
புந்தி - மனம்
கவின் - பேரழகு
காந்தன் - இறைவன் [காந்தம் போன்ற சக்தியுள்ளவன்]
சிந்தை - சிந்தனை 
சேந்தன் - முருகன்/செந்நிற அழகன்
சாந்தம் - அமைதி
சந்ததம் - எப்பொழுதும்
சிந்தும் - மலரும்
சிறுநகை - குறுநகை/புன்னகை/புன்சிரிப்பு
சித்தம் - உள்ளம்
செய்தவினை - முற்பிறப்பில் செய்தவினை/கன்மவினை
போக்கு - நீக்கு
செப்பிட - சொல்ல
விந்தன் - மென்மையானவன் [தாமரை போல]
விந்தமலர் - தாமரைமலர் போன்ற பாதம்
குருவிந்தம் - செந்நிறமான இரத்தினக் கற்களில் ஒன்று
மின்ன - ஒளிர
விந்தை - அற்புதம்
வியந்து - திகைத்து
விரைகழல் - விரைவாக ஒலிக்கும் காலணி [ஆண்கள்/வீரர்கள் அணிவது]

குறிப்பு:
விரைகழல் - நறுமணம்[விரை] உள்ள திருவடி/திருப்பாதம் என்ற கருதிலும் வரும்.
உண்மையில் படை வீரர்கள் காலில் அணியும் ஒருவைகை கால் அணியை விரைகழல் என்பர். விரைகழல்களை கணைக்காலில்/கணுக்காலில் அணிவர். அது காற்பெருவிரலுடன்/ விரல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். யுத்தத்தில் மேலே பாய்ந்து எதிரியை தாக்கும் பொழுது அந்தக் காலணியில் தொங்கும் சதங்கைகட்கு உள்ளே பதுங்கி இருக்கும் சிறு சக்கரங்கள் அல்லது ஊசி, குறுவாள் போன்றவை  அதை அணிந்திருக்கும் வீரர்கள் காற்பெருவிரலை அழுத்த வெளியே வந்து பகைவரை, யானையை, குதிரையை காயப்படுத்தி வதம் செய்ய உதவும். விரைகழல் உள்ளே இருக்கும் பரட்கருவியை பரல் ஆயுதம் என்றும் கூறுவர்.

Monday, 19 January 2026

யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!


ஆனந்தத் தேனருந்த ஆசைகொண்ட நாளாய்
            ஆடிவிளையாடி பாடிமகிழ்ந்தே யுயர்
வானந்த மலைதோயும் வான்மதியம் சூடும்
            விண்ணவனாய் வேதமுதல்வனாய் விளங்கு ஒளியாய்
தானந்தம் இல்லாத் தன்மையைக் காட்டிட
            தனித்தே ஈமவனமே அரங்காய் ஆட்டுகப்பாய்!
யானந்தம் கண்டிலேன் யாதுசெய்வோம் 
            யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஆனந்தத்தேன் - திருவருட்தேன்
அருந்த - குடிக்க
உயர் - உயர்ந்த
வானந்தம் [வான் + அந்தம்] - வானத்து முடிவு 
மலைதோயும் - மலை முட்டும்
வான்மதியம் - சந்திரன்/பிறைச்சந்திரன்
விளங்கு ஒளியாய் - மிளிர்கின்ற ஒளியாய்
தானந்தம் - தனக்கு முடிவு
ஈமவனம் - சுடுகாடு
அரங்காய் - மேடையாய்
ஆட்டுகப்பாய் - ஆடிமகிழ்வாய்
யானந்தம் கண்டிலேன் - நான் முடிவைக் காணவில்லை
யாது செய்வோம் - என்ன செய்வோம்
யாமறிய - நாம் காண/அறிந்துகொள்ள
ஆனந்தத் தேன்நடம் - திருவருட்தேன் நடனம்

Friday, 2 January 2026

என்றென்றும் உவந்திட அருள்வாய்!


முன்னையே முயன்று தவம் செய்யா
          மூர்க்கத்தால் பிறந்துழன்று
அன்னையே என்றரற்றி அனுதினம்
          அன்பிலூறி நைந்துருகி
நின்னையே நாளும் நினைந்தறியா
          நோயினேனை நோய்நீக்கி
உன்னையே எண்ணி என்றென்றும்
          உவந்திட அருள்வாயம்மா
இனிதே,
தமிழரசி.
 
சொல்விளக்கம்:
முன்னையே - முற்பிறப்பிலே
முயன்று - முயற்சிசெய்து
மூர்க்கத்தால் - முரட்டுத் தன்மையால்
உழன்று - துன்பத்தில் வருந்தி
என்றரற்றி - என்று துன்பத்தை சொல்லி அழுதல்
அனுதினம் - எப்போதும்
அன்பிலூறி - அன்பால் கனிந்து
நைந்துருகி - மனம் கரைந்து
நோயினேன் - பிறவி நோயை உடையேனை
நோய் நீக்கி - பிறவி நோயை நீக்கி
என்றென்றும் - எப்போதும்
உவந்திட - மகிழ்ச்சி இன்பத்தில் மூழ்க