Friday 10 February 2023

பாலைவனத்திடை பாடுகின்றேன்


பாலை வனத்திடை பாடுகின்றேன் - அங்கு
          பவள மல்லிகை பூத்ததுவே
சோலைக் குயில் கூவையிலே - அங்கு
          சோதிசுடர் ஒன்று தோன்றியதே
காலைக் கதிரவன் கனிந்துவர - அங்கு
          காவினம் கோவினம் பாடினதே
மாலை மருதம் வந்ததென்று - அங்கு
          மாமயில் தோகைவிரித் தாடினதே
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இப்பாடலை 2nd Jan 1990ல் அன்று இரவு மிகவும் மனதிற்கு துன்பமான நேரம் எனது நாட்குறிப்பில் எழுதத் தொடங்கினேன். "பாலைவனத்திடை பாடுகிறேன் - அங்கு" என்பதை மட்டுமே என்னால் எழுதமுடிந்தது. ஏதோ ஒரு சக்தி அப்பாடலை முழுமையாக எழுதவிடாது தடுத்தது. ஒருவருடம் கழித்து 7th Feb 1991 அன்று மகன் வாகீசன், 9 வயதில் GCSE Maths பரீட்சையில் 'A' எடுத்து சித்தியடைந்ததை "Maths whiz kid, 9, gets set to take A-level exam" என இலண்டனில் வெளிவரும் 'Evening Standard' செய்தியாக வெளியிட்டிருந்தது. 'தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது' என்ற திருவள்ளுவர் குறளை என்மனம் அசைபோட்டபடி இருந்தது. 1991ல் GCSE பரீட்சைக்கு A* கொடுக்கும் வழக்கம் இருக்கவில்லை. அன்று எங்களது பதிவுத்திருமணம் நடந்து 12வது வருடம். திருமணப்பரிசாக மகன் எமக்கு அச்செய்தியைத் தந்தான். எனவே மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தது. அன்று இரவு இப்பாடலின் மிகுதியை எழுதி முடித்தேன்.
பவளமல்லிகை

No comments:

Post a Comment