Friday, 28 March 2025

சாமரை வீசின நீர்த்துளிகள்


தாமரைபூத்த தடாக மென்றே அதை
            தளத்திருந்து பார்த்து ரசிக்கவந்தேன்
தாமரைமேல் இருகயல் துள்ளிடக் கண்டு
            தாவியோடி அருகில் சென்றேன்
பாமரன்போல் அவற்றைப் பற்றிட கைவிரித்தேன்
            பாவையவள் பதறியே எழுந்து நின்றாள்
சாமரை வீசின நீர்த் துளிகள்
            சற்றே சாடியகூந்தல் இடையிருந்தே
இனிதே,
தமிழரசி.

Friday, 14 March 2025

சக்திவேல் ஏந்தும் சண்முகா!


சக்திவேல் ஏந்தும் சண்முகா சரவணா
            சித்தமதில் குடியிருக்க சித்தமிரங்கி வா
பக்திவேல் ஏந்தும் பக்தர்கள் நாமென்றே
            பத்திமை அறியாது பத்தராய் தடுமாறி
உத்திவேல் ஏந்தி உண்மை உணராதே
            உவந்து உழன்று உழைத்து அழிவேமை
தத்தி வேலேந்தி தத்துவம் உரைக்க
            தளர்நடை இட்டுவா தண்டபாணி தெய்வமே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
சக்திவேல் - ஆதிசக்தி கொடுத்தவேல்
சண்முகா - அழகிய முகத்தை உடையவன். சண் - அழகு.
                    சண்+முகன் = சண்முகன், முருகன்.
சரவணா - சரவணம் - ஒருவகை நாணல் புல். சரவணப் பாயில்                              பிறந்தவன், முருகன்.
சித்தமதில் - மனதில்
சித்தமிரங்கி - மனமிரங்கி
பக்திவேல் - பக்தியாகிய வேல்
பக்திமை - பக்தியின் தன்மை
பக்தராய் - பக்தர் எனக்கூறி
தடுமாறி - மனம் ஒன்றாது
உத்திவேல் - உந்தி எழும் நுண்ணறிவாகிய வேல்
உண்மை உணராது - மெய்ப்பொருள் உண்மையை உணராது
தத்தி - தத்தி தத்தி
தத்துவம் - மெய்ப்பொருள் உண்மையை [கடவுள் உண்மை]
உரைக்க -  சொல்ல
தளர்நடை இட்டு - தத்தித்தத்தி குழந்தை நடக்கும் நடைநடந்து
தண்டபாணி தெய்வம் - முருகன்[தண்டக்கோல் வைத்திருப்போன்]