Sunday 1 September 2024

கந்தா நின்றன் கந்தம் கமழுமணம்


கந்தா நின்றன் கந்தம் கமழுமணம்
            காற்றில் கலந்து கடுகி வந்தே
அந்தா என்றன் அகந்தனில் புதுமணம்
            ஆற்ற கண்ணானந்த அருவிநீர் சொரிய
செந்தா மரைமலர் செய்ய பதம்
            சேவித்து எழுந்து சீர்மேவு நல்லைக்
கந்தா என்பாரைக் கணத்தில் கைதூக்கிக் 
            காக்கும் நின்கைக் கனக வேலே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கந்தம் - சந்தனம்
கமழும் - வீசும்
கடுகி - விரைவாக
அந்தா - வியப்பாக/அற்புதமாக
அகந்தனில் - மனதில்/எண்ணத்தில்
ஆற்ற - பரப்ப/நிரப்ப
செய்யபதம் - சிவந்த அடி
சேவித்து - வணங்கி
சீர்மேவு - செல்வம் நிறை
கணத்தில் - கணப்பொழுதில்