Wednesday, 22 February 2012

குறள் அமுது - (22)


குறள்:
“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்”                        - 540

பொருள்:
நாம் நினைத்ததை அடையும் வரை அதனையே தொடர்ந்தும் நினைத்தால் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் 54ம் அதிகாரமான 'பொச்சாவாமை' என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளாகும். ஆடம்பரம் அற்ற தன்மை 'சாப்பு' என்று சொல்லப்படும். பொய்ச்சாப்பு என்றால் சோர்வு, சோம்பல், மறதி போன்றவற்றைச் சுட்டும் சொல்லாகும். ஆதலால் 'பொச்சாவாமை' என்னும் இச்சொல்லாடல் சோர்வின்மை அல்லது மறவாதிருத்தல் என்ற கருத்தை தருகிறது. 

உள்ளியது என்றால் நினைத்தது. நாம் நினைத்ததை அடைய வழி என்ன? நாம் செய்ய நினைத்த செயலை மறக்காது தொடர்ந்து நினைத்தலே அதற்குச் சிறந்த வழியாகும். எனவே எங்கே எப்படி எந்த துறை சார்ந்த முயற்சியை நீங்கள் செய்தாலும் உங்கள் கடமையை மறந்து போகாதீர்கள். செய்ய வேண்டிய செயலை மறந்திருந்தால் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும்? செல்வச்செழிப்பால், பதவியுயர்வால், களியாட்டங்களால், சோம்பலால் கூட நாம் செய்ய வேண்டிய  செயலை மறந்து இருக்கக் கூடும். ஆதலால் நினத்ததை நினைத்தபடி மிக எளிதில் அடைய அதனை நினையுங்கள்.
எதைச் செய்தாலும் இழுத்தடித்துச் செய்யாது அன்றே செய்யுங்கள். நாம் எண்ணிய காரியத்தை செய்து முடிக்கும் வரை சோர்ந்து போகாதிருக்க, அதனை மறவாது சிந்திக்க வேண்டும். செய்ய நினைத்ததை எப்படிச் செய்வது? என்னால் தனித்துச் செய்ய முடியுமா? அதற்கு என்னென்ன வேண்டும்? அவற்றை பெறும் வழி என்ன? அவற்றை யார் யாரைக் கொண்டு செய்யலாம்? யார் யார் உதவி செய்வார்கள்?அதைச் செய்வதால் யார் யாருக்கு நன்மை? அதனால் வரும் தீமைகள் என்ன? என நீள நினையுங்கள். நிச்சயமாக உங்கள் கனவை மிக எளிதில் சென்றடைந்து வெற்றி பெறுவீர்கள்.
நாம் எண்ணிய செயலை மறக்காது தொடர்ந்து நினைத்தால் அச்செயலை மிக விரைவாகச் செய்து முடிப்போம் என இக்குறள் அறிவுறுத்துகிறது.

No comments:

Post a Comment